குறிப்பிட்டுச் சொல்லும்படி மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லையே .. சொல்கிறார் அமைச்சர் சண்முகநாதன்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழைவெள்ளத்தால் உயிர்சேத பாதிப்பு ஏதும் இல்லை என்று அமைச்சர் சண்முகநாதன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் அமைச்சர் சண்முகநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது இப்படிக் கூறியுள்ளார். மழை வெள்ளத்தில் சிக்கி தூத்துக்குடி தொடர்ந்து தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சண்முகநாதன் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியிலிருந்து:
இதுவரை இல்லாத மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற மழை இதுவரை வந்தது இல்லை. தமிழக முதல்வரின் உத்தரவுப்படி மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகள் போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
6 முகாம்களில் மக்கள்
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 13,414 பேர் 6 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. 16படகுகள் மூலமாக வெள்ளத்தினாலும், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளிலும் இருந்த மக்கள் பத்திரமாகமீட்க்கப்பட்டுள்ளனர்.
உயிர்ச்சேதம் இல்லை
முதல்வரின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகத்தின் திறம்பட்ட முன்னெச்சரிக்கை பணிகளால் உயிர்சேதம் ஏதும் இல்லை. மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர், கடலோர காவல்படையினர், காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், மீன்வளத்துறையினர், மருத்துவத்துறையினர் என அனைத்து துறையினரும் மீட்புப்பணிகளை மும்முரமாக மேற்கொண்டுள்ளனர்.
கணக்கெடுப்பு நடக்கிறது
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிந்துள்ள வீடுகள், இறந்த கால்நடைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் அதிகாரிகள் மூலமாக துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
குறிப்பிடும்படி பாதிப்பு இல்லையே
தொடர்மழை, மழையினால் வந்த காட்டாற்று வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நான், கலெக்டர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். இதில் குறிப்பிடும்படி மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை.
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
சிலபகுதிகளில் மழைவெள்ளம் உட்புகுந்ததற்கு நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் என்று கூறப்பட்டுள்ளது. இவற்றினை வரும் நாட்களில் கண்டறிந்து அகற்றுவதற்கான முயற்சிகளை கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்றார்.