1ஆம் வகுப்பில் சேர்க்க சிபாரிசு கடிதம்- தீயாக பரவும் செங்கோட்டையன்.. லெட்டர்!
தனியார் பள்ளியில் சிறுமி ஒருவரை 1ஆம் வகுப்பு சேர்க்க அமைச்சர் செங்கோட்டையன் சிபாரிசு கடிதம் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தனியார் பள்ளியில் சிறுமி ஒருவரை 1ஆம் வகுப்பு சேர்க்க அமைச்சர் செங்கோட்டையன் சிபாரிசு கடிதம் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமைச்சராக பதவியேற்ற உடனேயே ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட நிரூபரிடம் சிக்கி உளறித் தள்ளினார் அமைச்சர் செங்கோட்டையன். அமைச்சர் செங்கோட்டையனின் அந்த இன்டர்வியூ சமூகவலைதளங்களில் தீயாக பரவி கிண்டலுக்குள்ளானது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையனின் ஆங்கிலப்புலமையை கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்கள், ட்ரோல் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து ஏதாவது ஒன்றில் சிக்கி அவ்வபோது பிரபலமாகி வருகிறார் அமைச்சர் செங்கோட்டையன்.
அமைச்சரின் சிபாரிசு கடிதம்
இந்நிலையில் சென்னை தனியார் பள்ளியில் சிறுமி ஒருவரை ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளுமாறு அமைச்சர் செங்கோட்டையனின் கையெழுத்துடன் சிபாரிசு கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்தக் கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்புக்கு
கண்ணன் என்பவரின் மகள் கனிஷ்க்காவுக்காக அந்த சிபாரிசு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சென்னை சிஎஸ்ஐ ஈவார்ட்ஸ் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்துக் கொள்ளுமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செங்கோட்டையனின் லெட்டர் பேடு
நடப்பு கல்வியாண்டில் சேர்த்துக்கொள்ளுமாறு பச்சை இங்க்கால் கையெழுத்திட்டு அமைச்சர் செங்கோட்டையனின் லெட்டர் பேடிலேயே அந்தக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக்கடிதம் கடந்த வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டுள்ளது.
தீயாக பரவும் கடிதம்
இந்தக் கடிதம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமைச்சர் ஒருவர் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்க்க சிபாரிசு கடிதம் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.