அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அழகிரி கடைசி வரை வரவேயில்லையே!
கருணாநிதியின் வைரவிழாவுக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள தலைவர்களை அணி திரட்டிய ஸ்டாலின், தனது அண்ணன் மு.க. அழகிரியை மறந்தது ஏனோ?
சென்னை: கருணாநிதியின் வைரவிழாவுக்கு ஊரையே கூட்டிய மு.க.ஸ்டாலின் தனது அண்ணனை அழைக்கவில்லை. வந்த தங்ககையையும் பேசவும் அழைக்கவில்லை என்பது பலரையும் முனுமுனுக்க வைத்துள்ளது.
மு.க.அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே உள்ள பிரச்சினையில் கருணாநிதி என்னென்னவோ செய்து பார்த்தார். அவ்வப்போது தட்டி வைத்தும் அழகிரி அடங்காததால், அழகிரி உள்பட அவரது ஆதரவாளர்களை கடந்த 2014-இல் நீக்கினார்.
இந்நிலையில் அழகிரி - ஸ்டாலின் இணைப்புக்கு பல முயற்சிகள் நடந்தன. ஆனால் எதுவும் பலன் தரவில்லை. இந்த நிலையில், கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், சட்டசபை உறுப்பினராக தேர்வாகி 60 ஆண்டுகள் நிறைவானதை தொடர்ந்து வைரவிழாவும் இன்று மாலை நடந்தது.
இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, பிகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கடைசி வரை கலந்து கொள்ளவே இல்லை. அதேபோல் விழாவுக்கு அழைக்கப்பட்ட கனிமொழியும் கடைசி வரை பேசவில்லை.
எந்த விழாவானாலும் சரி கருணாநிதியுடன் முன்வரிசையில் இருந்த தயாநிதி மாறனுக்கு இன்று மேடைக்கு கீழே இருக்கை அளிக்கப்பட்டது. அவரும் களையிழந்தே காணப்பட்டார். மொத்தத்தில் இன்றைய விழா என்னவோ கருணாநிதிக்குத்தான் என்றாலும் கூட ஸ்டாலின் தான் பிரதானமாக காட்சி தந்தார்.