திருமங்கலத்தில் வென்றது நான் அல்ல.. கருணாநிதி பார்முலா.. அழகிரி உடைத்த ரகசியம்
மதுரை: திருமங்கலத்தில் வென்றது நான் அல்ல, அது கருணாநிதியின் பார்முலா என்று அழகிரி ரகசியத்தை போட்டு உடைத்தார்.
கருணாநிதி மறைவுக்கு பின்னர் தற்போது தமிழகத்தில் அனைவராலும் உற்றுநோக்கப்படுபவர் மு. க. அழகிரி. திமுகவுக்கு தன்னை சேர்த்து கொள்ள வேண்டும் என்று கெஞ்சியும் மிரட்டியும் பார்த்தும் அது நடக்கவில்லை.
இதையடுத்து அமைதி பேரணியை நடத்தி அதன் மூலம் தன் பலத்தை ஆழம் பார்த்தார். அதில் ஒன்றரை லட்சம் பேர் வரை பேரணியில் கலந்து கொண்டதாக அழகிரி கூறினார்.

ஆங்கில நாளிதழ்
ஆனால் உண்மையில் சொல்ல போனால் ஆயிரக்கணக்கானோர் மட்டுமே வந்தனர். திருமங்கலம் பார்முலா என்றாலே நினைவுக்கு வரும் அழகிரி அது குறித்து ஆங்கில நாளிதழான ரிபப்ளிக் வேர்ல்டுக்கு பேட்டியளித்தார்.

தவறாக புரிந்து
அப்போது அவர் கூறுகையில் திருமங்கலம் பார்முலா என்பது இந்தியா முழுவதும் பின்பற்றப்படுகிறது. இதை சிலர் தவறாக சித்தரிக்கின்றனர். திருமங்கலம் பார்முலா என்றால் பணம்தான் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அது அப்படி இல்லை.

திருமங்கலம் பார்முலா
கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் என் தந்தையுடன் இருந்து வந்தேன். ஏராளமான தேர்தல்களை பார்த்துள்ளேன். சென்னை சைதாப்பேட்டை தொகுதி தேர்தலையும் பார்த்துள்ளேன். திருமங்கலம் பார்முலாவை என் தந்தை மூலம்தான் கற்றுக் கொண்டேன். கடந்த 1962-ஆம் ஆண்டு தேர்தல் பணிகளை உடன் இருந்து கவனித்து கொண்டதை அடுத்து 1967-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நான் பணியாற்றினேன்.

முழுவீச்சில்
தேர்தல்களின்போது இரவு நேரங்களில் தந்தை தூங்கக் கூட மாட்டார். தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபடுவார். தேர்தல் நேரத்தில் என்னை வெகுதூரத்துக்கு அழைத்து செல்வார். இரவு 10 மணிக்கு மேல் நாங்கள் வாக்குச் சாவடிகளுக்கு செல்வோம். ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை கட்சி தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவோம். இதுதான் திருமங்கலம் பார்முலா என்றார் அவர்.












Click it and Unblock the Notifications