கருணாநிதி கூறிய கடைசி வார்த்தைகள்... மீண்டும் பரபரப்பை கிளப்பிய மு.க. அழகிரி!
Recommended Video
சென்னை: கருணாநிதி என்னிடம் கூறிய கடைசி வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன, அதை வெளியில் சொல்ல முடியாது என்று அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தெரிவித்தார்.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து மூன்றாவது நாள் அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த அழகிரி சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எனது அப்பாவிடம் ஆதங்கத்தை தெரிவிக்க வந்துள்ளேன்.
அது என்னவென்று இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தெரிவிப்பேன். கட்சியில் கலைஞரின் உண்மையான விசுவாசிகள் என் பின்னால்தான் உள்ளனர்.
பெரிய தலைவர்
திமுகவுக்கு நான் வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை. கட்சிக்குள் சென்றால் பெரிய தலைவராகிவிடுவேன் என்ற அச்சம் கட்சி நிர்வாகிகளுக்கு உள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் அழகிரி.
பாராட்டு
இதற்கடுத்த திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது அழகிரியால் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்தார் ஸ்டாலின். இதனால் அவர் எல்லோராலும் பாராட்டப்பட்டார்.
5-ஆம் தேதி பேரணி
இந்நிலையில் அழகிரி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அவர் கூறுகையில் கருணாநிதி நினைவிடத்துக்கு வருகிற செப்டம்பர் 5-ந்தேதி அமைதிப் பேரணி நடக்கிறது. இதில் 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள்.
பாஜக இயக்கவில்லை
கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் என்னுடன் உள்ளனர் என்பதை அமைதி பேரணி மூலம் நிரூபித்து காட்டுவேன். என்னை பாஜக இயக்குவதாக கூறுவது தவறு. என் பின்னால் திமுக தொண்டர்கள்தான் உள்ளனர்.
இப்போதே சொல்ல முடியாது
ரஜினியுடன் இணைந்து செயல்படுவீரா என்று கேட்கிறீர்கள். அவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அப்படியிருக்கும் போது அவரோடு இணைந்து செயல்படுவதை எப்படி சொல்ல முடியும். அரசியலில் பின்னால் நடப்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது.
கருணாநிதியின் இறுதி வார்த்தைகள்
தனிக்கட்சி தொடங்குவது குறித்தும் என்னிடம் நிறைய பேர் கேட்டு வருகிறார்கள். கருணாநிதி என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் நினைவில் உள்ளன. அதை இப்போது வெளியில் சொல்லக் கூடாது. அவர் என்ன நினைத்தாரோ அதன்படி செயல்படுவேன் என்று அழகிரி தெரிவித்தார்.