ஏற்காடு தொகுதியில் வாக்கு வேட்டை நடத்தும் ஸ்டாலின், கனிமொழி
சென்னை: இடைத்தேர்தலையொட்டி ஏற்காடு தொகுதியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருக்கின்றனர்.
ஏற்காடு தொகுதியில் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் சரோஜா, திமுக சார்பில் மாறன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தேமுதிக சார்பில் யாரும் போட்டியிடாததால் அதிமுக மற்றும் திமுகவுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதற்கிடையே மாறன் தொகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் மாறனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வரும் 29ம் தேதி முதல் 2ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் ஏற்காடு தொகுதியில் வாக்கு வேட்டை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக மாறனை ஆதரித்து திமுக எம்.பி. கனிமொழி வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். அவர் வரும் 23ம் தேதி மாலை 5 மணிக்கு தும்பல் பகுதியிலும், இரவு 7 மணிக்கு சிங்கபுரம் பகுதியிலும் பிரச்சாரம் செய்கிறார். இதையடுத்து வவரும் 24ம் தேதி பகல் 12 மணிக்கு ஏற்காட்டிலும், மாலை 6 மணிக்கு அயோத்தியாபட்டனம் ராமர் கோவில் திடலிலும் பிரச்சாரம் செய்கிறார்.