ஐஜி தலைமையிலான குழு சென்றிருந்தால் பெரியபாண்டி உயிரிழந்திருக்க மாட்டார்- ஸ்டாலின்
ராஜஸ்தானுக்கு ஐஜி தலைமையிலான குழு சென்றிருந்தால் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி உயிரிழந்திருக்கமாட்டார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஐஜி தலைமையிலான குழு ராஜஸ்தானுக்கு கொள்ளையர்களை பிடிக்கச் சென்றிருந்தால் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிரிழந்திருக்கமாட்டார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஆளுநர் பன்வாரிலை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் குடும்பத்துக்கு ரூ1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆவடியில் உள்ள பெரியபாண்டியின் வீட்டுக்கு நேரில் சென்றார் ஸ்டாலின்.
பெரியபாண்டியின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், பெரிய பாண்டியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு தர வேண்டும்.
ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களுக்கு கொள்ளையர்களை பிடிக்கச் செல்லும் போது ஐஜி தலைமையிலான ஒரு படை சென்றிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் பெரியபாண்டி உயிரிழந்திருக்கமாட்டார் என்றார்.