ஜெ. ஆட்சியில் 2,300 விவசாயிகள் தற்கொலை- மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
பெரியகுளம்: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 2,300 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை தேடி வருகிறார் ஜெயலலிதா. திமுக ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பல திட்டங்களையும் முடக்கியவர் ஜெயலலிதா.
கோட்டைக்கே போகாத ஜெயலலிதா பிற மாவட்டங்களில் எப்படி சுற்றுப் பயணம் செய்வார்? முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் அக்கறையற்ற அரசாக அதிமுக ஆட்சி இருந்தது.
அதிமுக அரசு விவசாயிகளை கொடுமைப்படுத்தும் ஆட்சியாக இருந்தது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2,300 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
ஜெயலலிதா தேர்தல் பிரசார கூட்டங்களில் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக பொய் கூறிவருகிறார். 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், முதியோருக்கு இலவச பஸ் போன்ற பல வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்றவில்லை.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications