மருத்துவ கல்லூரிக்கு போலி இருப்பிடச் சான்று கொடுத்த வெளிமாநில மாணவர்கள்.. மு.க. ஸ்டாலின் கண்டனம்
நீட் அடிப்படையிலான மருத்துவ கலந்தாய்வில் கேரள மாணவர்கள் 7 பேர் போலியான முகவரியை கொடுத்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர முயற்சித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூ
சென்னை: தமிழக மருத்துவ கலந்தாய்வில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் போலி இருப்பிடச் சான்று கொடுத்து சேர முயற்சித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகள் முடிந்து மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் கடந்த வாரம் நடந்தது. அப்போது கவுன்சிலிங்கை தொடங்கிவைத்துப் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,' போலி இருப்பிட சான்றிதழ் அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுவரை 9 பேர் போலி சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; எனவும் கூறி இருந்தார்.
இது மிகப்பெரிய அளவில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இருப்பிட சான்றிதழ் மூலம் மருத்துவ படிப்பில் சேர முயன்றவர்கள் அளித்த சான்றிதழ் போலி என்பது உறுதியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் நடைபெற்றுள்ள ஊழல், மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழலை விட மோசமானதாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனால் இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக் கொள்கைகள் எல்லாம் குதிரை பேர அரசால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.போலி இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மற்றும் முறைகேடான தேர்வு மூலம் வேறு மாநிலத்தவரை மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு அதிமுக அரசு துணை போயிருப்பது கண்டனத்திற்குரியது.
இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்க காரணமாக இருந்தோர், தேர்வுக் கமிட்டிக்கு நிர்பந்தம் கொடுத்தோர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதால் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். " என்று அவர் கூறியுள்ளார்.