மீண்டும் ஸ்டாலின் எழுச்சிப் பயணம்.. தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு!!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.
சென்னை: திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் எழுச்சிப் பயணம் மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும் பொதுமக்களை சந்தித்து பேச உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலின் போது நமக்கு நாமே என்ற பெயரில் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். திமுகவினர் அல்லாமல் பொதுமக்களை நேரடியாக சந்தித்து உரையாடி அவர்களின் குறைகளை கேட்பதுதான் நமக்கு நாமே பயணத்தின் நோக்கமாக இருந்தது.

பொதுமக்கள் மத்தியிலும் திமுகவினர் மத்தியிலும் நமக்கு நாமே பயணம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் மீண்டும் தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள தாம் திட்டமிட்டுள்ளதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஸ்டாலின் கூறுகையில், நவம்பர் முதல் வாரத்தில் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் வாரம் வரை இந்த பயணம் நடைபெறும்.
தற்போதைய அரசின் அவலங்களை விளக்கி வீட்டுக்கு அனுப்புவது குறித்து இந்த பயணத்தில் பேசப்படும். ஓரிருநாட்களில் பயணத்திட்டம் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications