விபத்தில் சிக்கியவர்களை தனது காரில் மருத்துவமனை அழைத்து சென்று காப்பாற்றிய மானாமதுரை எம்எல்ஏ!
சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 4 பேரை தனது காரில் மருத்துவமனை அழைத்து சென்று காப்பாற்றியுள்ளார், மானா மதுரை அதிமுக எம்எல்ஏ, மாரியப்பன் கென்னடி.
மானாமதுரை: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நான்கு பேரை தனது காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார் அதிமுகவை சேர்ந்த மானாமதுரை தொகுதி எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி.
மதுரை செல்லூரை சேர்ந்த தங்கவேல் மகன் வினோத் (21). இவர் தனது உறவினர்கள் தில்லையம்மாள் (55), ராகுல் (11), மதன் (6) ஆகியோருடன் பைக்கில் பரமக்குடியில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

மானாமதுரையை அடுத்த மேலப்பசலை ஆற்றுப் பாலம் அருகே பைக் சென்றபோது, திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் 4 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

அதேநேரம், பார்த்திபனூரில் இருந்து மானாமதுரைக்கு அந்த வழியாக எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி சென்று கொண்டிருந்தார். அப்போது படுகாயங்களுடன் நடுரோட்டில் கிடந்த 4 பேரையும் அவர் மீட்டு தனது காரில் ஏற்றி, மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தக்க நேரத்தில் மாரியப்பன் கென்னடி, தனது காரில் 4 பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்ததால், அவர்கள் உயிர் பிழைத்தனர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications