ஜெயலலிதா உடல் நலம் விசாரிக்க இன்று சென்னை வருகிறார் மோடி?
சென்னை: ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னைக்கு பிரதமர் மோடி இன்று வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல் நலம் குறித்து தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அப்போலோ வந்து விசாரித்துவிட்டு செல்கின்றனர். மேலும், டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி திடீரென்று சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்துக் சென்றார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அப்போலோவுக்கு சென்றார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பாஜக தலைவர் அமித் ஷாவும், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியும் சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மருத்துவர் குழுவிடம் விசாரித்து விட்டுச் சென்றனர்.
இதனையடுத்து, பிரதமர் மோடி எப்போது ஜெயலலிதாவின் உடல் குறித்து விசாரிக்க சென்னை வருவார் என்ற கேள்வி எழுந்தது. மேலும், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ஏன் மோடி இன்னும் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க வரவில்லை என்று கேள்வி இருந்தார்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க இன்று பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.