கறுப்பை வெள்ளையாக்க ஆலோசித்த அமைச்சர்கள்... வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட பணம்?!
ஆயிரம், 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததால் அதிர்ச்சியடைந்த அரசியல்வாதிகள் விடிய விடிய தூங்காமல் கறுப்பை, வெள்ளையாக்குவது எப்படி என்று ஆலோசனை நடத்தினார்களாம்.
சென்னை: ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்த நேரத்திலிருந்து மக்களிடமிருந்த பரிதவிப்பைவிட, தமிழக அமைச்சர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் பல்ஸ் எகிறியதுதான் பன் மடங்கு அதிகம். இந்த அறிவிப்பு வெளியாகும் என்பதை முன்பே அறிந்து பெரிய தொகை ஒன்றை வெளிநாட்டுக்கு கடத்தி விட்டார்களாம்.
செவ்வாய்கிழமை இரவு தமிழகத்தின் பிரபல ஆடிட்டர்கள் தொடங்கி சாதாரண ஆடிட்டர்கள் வரை ரொம்ப பிஸி. எந்தெந்த ஆடிட்டர்களை எந்தந்த அமைச்சர்கள் தொடர்புகொண்டு ஆலோசித்தனர் என்பதை மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அதனால், புலனாய்வுத்துறையினரும் செவ்வாய்கிழமை இரவு முழுவதும் தூங்கவில்லை.
தங்களிடம் விவாதித்த அமைச்சர்களிடத்தில், பதட்டமடைய வேண்டாம். கால அவகாசமிருக்கிறது என்று சொல்லி அவர்களின் மன உளைச்சல்களை அமைதிப்படுத்தினர் ஆடிட்டர்கள். ஆனாலும், கணக்கில் காட்டப்படாமல் பதுக்கி வைத்திருக்கும் தொகைகள் முழுவதும் எந்த வழிகளில் மாற்ற முடியும் என்கிற கவலை தமிழக அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஆக்ரமித்தே இருக்கிறது.
இதற்கிடையே, சசிகலா தரப்புக்கு இப்படிப்பட்ட தகவல்கள் முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டது என்றும் அதனால் முடிந்தளவு பெருந்தொகைகளை வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுவிட்டது என்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகளிடையே ஒரு தகவல் எதிரொலித்தபடியே இருக்கிறது.