வங்கிகளை சூதாட்ட அரங்கமாக மாற்றும் மத்திய அரசு.. முத்தரசன் கடும் கண்டனம்
எளிய மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் அறிவிப்புகள் அனைத்தையும் மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அரசுத் துறை வங்கிகள் நாட்டு மக்களுக்கானது. வெறும் லாப நோக்கோடு பணம் திரட்டும், சூதாட்ட அரங்கமாக அதனை மத்திய அரசு மாற்றத் துடிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) வங்கிக் கணக்கில் வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ 5000 வைத்திருக்க வேண்டும், இல்லையேல் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணம் என்றும் தனியார் வங்கிகள் அறிவித்துள்ளது போல் அரசு துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் பணபரிவர்தனைக்கு ரூ 50 கட்டணம் விதித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
பெருநகரங்களில் வசிப்போர் குறைந்தபட்ச இருப்புத் தொகை 5 ஆயிரம் வைத்திருக்கவேண்டும் என்றும், நகர்புறங்களில் வசிப்போர் 3 ஆயிரமும், புறநகர் பகுதிகளில் வசிப்போர் 2 ஆயிரமும், கிராமப் புறங்களில் வசிப்போர் ஆயிரம் ரூபாயும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்புகள் வங்கிகள் நாட்டுமை ஆக்கப்பட்டதின் நோக்கத்தையே சிதைக்கிறது.
கூலி வேலை பார்ப்பவர்கள், சிறுசிறு சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், வேலையற்ற ஏழைகள் என பல கோடிபேர் வாழும் நாட்டில் இத்தகைய அறிவிப்புகள் மக்கள் மீதான தாக்குதலாகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
வங்கிகள் சேமிப்பிற்கானது, வங்கிகள் சுயசார்பிற்கானது, வங்கிகள் எளிய மக்களின் பணப் புழக்கத்திற்கானது என வங்கிகளின் அடிப்படை நோக்கங்களையே பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்புகள் தகர்க்கிறது.
பாரத ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இத்தகைய உத்தரவுகளை தொடங்கியது இனியுள்ள ஏராளமான அரசு துறை வங்கிகளும் இதே போல் அறிவிப்புகளை வெளியிட வங்கி துறையும், நிதி அமைச்சகமும் முன்னோட்டம் பார்ப்பதாவே கருதத் தோன்றுகிறது.
அரசுத் துறை வங்கிகள் நாட்டு மக்களுக்கானது. வெறும் லாப நோக்கோடு பணம் திரட்டும், சூதாட்ட அரங்கமாக அதனை மத்திய அரசு மாற்றத் துடிப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. எளிய மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் அறிவிப்புகள் அனைத்தையும் ரத்துசெய்ய வேண்டும். இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications