புதுவையிலும் நாம் தமிழர் தனித்து போட்டி: விரைவில் வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுவை: புதுச்சேரி சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 28 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழன் மீரான் நேற்று தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்களை கடலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஒரே மேடையில் ஏற்றி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். கடலூரில் தான் போட்டியிடுவதாகவும் சீமான் அறிவித்தார்.

இந்நிலையில் புதுவையிலும் நாம் தமிழர் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழன் மீரான் கூறுகையில், வருகிற சட்டசபை தேர்தலில் புதுவை மாநிலத்தில் மாகி, ஏனாம் பிராந்தியங்களை தவிர்த்து மற்ற 28 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஒப்புதலை பெற்று விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
தேர்தலில் தனி மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு முன்னுரிமை அளிப்போம். மாகி, ஏனாம் போன்ற பிற மொழி பேசும் தொகுதிகளை அந்தந்த மொழி வழி மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் படையெடுப்பு, மதுவினால் மக்கள் அடையும் இன்னல்கள் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications