காவிரி: தமிழகத்துக்கு மத்திய அரசு பச்சைத் துரோகம் செய்துவிட்டது – சீமான் ஆவேசம்
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்ததன் மூலம், தமிழகத்துக்கு மத்திய அரசு பச்சைத் துரோகம் செய்து விட்டது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நிலையைக் கண்டித்து திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்களும் நாம் தமிழர் கட்சியினரும் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசைக் கண்டித்தும், கர்நாடக அரசைக் கண்டித்தும் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி அண்ணாசிலை அருகே நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்களும் நாம் தமிழர் கட்சியினரும் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், காவிரி மோலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வாரியத்தில் இடம்பெற வேண்டிய உறுப்பினர்களை தமிழகம், கேரளம், புதுச்சேரி அரசுகள் அறிவித்துவிட்டன. அந்த நிலையில், வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு மறுத்து விட்டது. இதன் மூலம், தமிழகத்துக்கு மத்திய அரசு பச்சைத் துரோகம் செய்துவிட்டது என்றார். மேலும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அடிக்கடி விமர்சிக்கும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது குறித்து மோடியை விமர்சிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications