ஹீரோயினை கடத்திய வில்லன்: நிஜம் என்று துரத்திய ஈரோடு போலீஸார்
சென்னை: நானும் காதலிச்சேன் படக்குழுவினர் ஈரோட்டில் ஹீரோயினை கடத்தும் காட்சியை படமாக்கியபோது போலீசார் அதை நிஜம் என நினைத்து துரத்தியுள்ளனர்.
குட்டே மூவீஸ், ஸ்ரீசெந்தூர் மூவி சார்பில் எஸ்.பிரேமா, வினோஜ் தாமஸ் ஆகியோர் சேர்ந்து தயாரித்துள்ள படம் நானும் காதலிச்சேன். பி. ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் சில சுவாரஸ்யமான தகவல்கள் வருமாறு,
புதுமுகங்கள்
நானும் காதலிச்சேன் படத்தில் புதுமுகங்களான சூர்ய பிரகாஷ் மற்றும் நூர்யா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.
கதை
படிக்கும் வயதில் காதலித்தால் படிப்பு என்னாகும், பெற்றோர் எப்படி அவதிப்படுவார்கள், எதிர்காலம் எப்படி கேள்விக்குறியாகும் என்பது தான் நானும் காதலிச்சேன் படத்தின் கதை.
கடத்தல்
ஈரோடு அருகே உள்ள சித்தேடு நெடுஞ்சாலையில் ஹீரோயின் நூர்யாவை காரில் கடத்திச் செல்லும் காட்சியை கடந்த சில நாட்களுக்கு முன்பு படமாக்கினர்.
போலீஸ்
படப்பிடிப்பு நடக்கிறது என்பது தெரியாமல் ரோந்து போலீசார் யாரோ பெண்ணை கடத்துவதாக நினைத்து அந்த காரை விரட்டி வந்து ஈரோடு சிக்னல் அருகே வளைத்துப் பிடித்துள்ளனர்.
கூட்டம்
போலீசார் காரை மடக்கியதும் அங்கு கூட்டம் கூடிவிட்டது. பின்னர் படக்குழுவினர் இது படப்பிடிப்பு தான் என்று கூறி காரில் வைத்திருந்த கேமராக்களை காட்டிய பிறகே போலீசார் அங்கிருந்து சென்றுள்ளனர்.