நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்... மீண்டும் இன்று தொடங்குகிறார் ஸ்டாலின்
சென்னை: தமிழகம் முழுவதும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மூலம் மக்களை சந்தித்து வரும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மீண்டும் தனது பயணத்தை சென்னையில் இன்று தொடங்குகிறார்.
தமிழகத்தில் இந்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்' என்ற பெயரில் ஸ்டாலின் மக்களை சந்தித்து வருகிறார். இந்த பயணம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் முடிவடைந்து விட்டது. 31 மாவட்டங்களில் உள்ள 212 சட்டமன்ற தொகுதிகளில் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து உள்ளார். 3 கட்டங்களாக நடந்த பயணம் கடந்த நவம்பர் 6ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் நிறைவடைந்தது.
இதனிடையே சென்னையில் பெய்த பெரு மழை காரணமாக நமக்கு நாமே பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நமக்கு நாமே பயணம் ஜனவரி முதல் வாரம் முதல் பிப்ரவரி கடைசி வரை சென்னையில் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் அறிவித்தார். அதன்படி சென்னையில் நமக்கு நாமே பயணம் இன்று தொடங்குகிறது.
முதல் நிகழ்ச்சி சென்னை ஆர்கே. நகர் தொகுதியில் உள்ள நேதாஜி நகர் நாடார் உறவின் முறை மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.