தூத்துக்குடி: தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வருகை- மழை நின்றதால் வெள்ளம் குறைந்தது
தூத்துக்குடி: கனமழை வெள்ளம் ஏற்பட்டால் மக்களை உடனடியாக மீட்பதற்கான தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தூத்துக்குடியில் தயார் நிலையில் உள்ளனர். சனிக்கிழமை முதல், மழை குறைந்ததால், தாமிர பரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கும் குறைந்துள்ளதால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டத்தில், நவம்பர் 17 முதல் மழை தொடர்ந்து பெய்தது. 23ம் தேதி ஏற்பட்ட வெள்ள பெருக்கு துாத்துக்குடியை புரட்டி போட்டது. நகருக்குள் அப்போது புகுந்த வெள்ள நீர், இன்று வரை பல பகுதிகளில் அகற்றப்படவில்லை.

அதன் பின் நின்ற மழை, டிசம்பர் 1ல் மீண்டும் துவங்கியது. பலத்த மழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 'துாத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் மீட்பு குழு துணை கமாண்டன்ட் வைரவநாதன் தலைமையில், 110 பேர் துாத்துக்குடிக்கு வந்தனர். அதே போல், சென்னை ரெஜிமென்டை சேர்ந்த ராணுவத்தினர், கர்னல் பிரதீப்குமார் தலைமையில், 170 பேரும் வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ரவிக்குமார் தலைமையில், வெள்ள முன்னெச்சரிக்கை கூட்டம் நடந்தது. அதில், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில், சனிக்கிழமை காலை முதல், மழை பெய்வது நின்றுவிட்டது; ஞாயிறன்று வெயில் தலைகாட்டியது. தாமிரபரணியாற்றில் வெள்ளம் குறைந்தது. கன மழையோ, வெள்ளமோ ஏற்படாததால், வீரர்களும், பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications