நெல்லை: காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை! எக்ஸிட்போல் முடிவால் வேதனை!!
நெல்லை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், மனமுடைந்த நெல்லை காங்கிரஸ் பிரமுகர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நெல்லை அடுத்த பேட்டையை சேர்ந்தவர் அருணாசலம் வயது 40. இவருக்கு ஆறுமுக செல்வி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அருணாசலம், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தின் பொறுப்பாளராக உள்ளார்.
நேற்று இரவு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை அருணாசலம் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது, காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும், ராகுல்காந்தியின் வெற்றி வாய்ப்பும் இழுபறி நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இதை பார்த்தது முதல் அவர் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை அருணாசலம் தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அருணாசலம் மறைந்த செய்தியை கேட்டு, நெல்லை காங்கிரஸ் பிரமுகர்களும் தொண்டர்களும் அவரது வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு எதிரொலியாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், நெல்லையில் காங்கிரஸ் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.