போலீஸ் கெடுபிடி.. புஷ்வானமாக போன இளைஞர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாடத்திற்கு போலீசார் கடும் கட்டுபாடு விதித்துள்ளனர். இதனால் இளைஞர்கள் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளனர்.
நெல்லை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனால் நெல்லை மாவட்ட இளைஞர்கள் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளனர்.
வரும் 31ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் 2016ம் ஆண்டு விடை பெறுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டிற்கு நெல்லை,தூத்துக்குடியில் உள்ள விடுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தங்கும் விடுதிகளில் கேளிக்கை விருந்து, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாடத்திற்கு போலீசார் கட்டுபாடுகளை விதி்த்துள்ளனர்.
பொது இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கி மூலம் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. பொது இடங்களில் வாண வேடிக்கை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு சாலைகளில் கூச்சலிட்டு செல்பவர்கள் மீதும் கடும நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும் மது அருந்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் நள்ளிரவில் நடக்கும் வழிபாடுகளுக்கு எந்த வித தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூபாய் நோட்டு தடை காரணமாக பலர் கையில் பணம் இல்லை. குறிப்பாக இளைஞர்களின் கைளில் போதிய பணம் இப்போது புரளவில்லை.
இதனால் அவர்கள் புத்தாண்டு கொண்டாடத்தில் ஈடுபாடு இல்லாமல் இருக்கின்றனர். இந்த புத்தாண்டை எளிமையாக கொண்டாட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.