மதன் மச்சானை பூமிகா கொலை பண்ணிட்டாளா?
வம்சம் சீரியலில் டாக்டர் மதனை அவளது மனைவி பூமிகாவே கொலை செய்து விட்டாளா என்றுதான் நேற்று இரவு முழுவதும் அக்கம் பக்கத்து இல்லத்தரசிகளின் பேச்சாக இருந்தது.
சென்னை: வம்சம் சீரியல் சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது. ரம்யா கிருஷ்ணன் தவிர சீரியலில் பல நட்சத்திரங்கள் மாறி விட்டனர். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பூமிகா தனது கணவர் மதனை கொலை செய்து விட்டதாக கூறுவதாக நேற்றைய எபிசோடு முடிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கு தண்டனை பெற்ற கணவன் உயிரை காப்பாற்ற தீ மிதித்து விரதம் இருந்த பூமிகாவா இப்படி செய்தது என்று பேசி பேசியே தூக்கத்தை தொலைத்து விட்டனர்.
பூமிகா ஏன் இப்படி செய்தாள்?... ஐயோ ரம்யா கிருஷ்ணனுக்காவது போன் போடுங்கப்பா என்று கேட்டு டிஆர்பியை ஏற்றி விட்டனர்.

வம்சம்
சன்டிவியில் ஒளிபரப்பாகும் வம்சம் சீரியல் கடந்த 1100 எபிசோடுகளாக ஒளிபரப்பு வருகிறது. இதுவரை 3 இயக்குநர்களுக்கு மேல் மாறி விட்டனர். கதை என்னவென்றுதான் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கலெக்டர் அர்ச்சனா
சென்னை கலெக்டராக வரும் அர்ச்சனாவிற்கு தனது குடும்ப பிரச்சினையை தீர்க்கவே நேரம் சரியாக உள்ளது. அப்படி இல்லை என்றால் பூமிகா குடும்பத்து பிரச்சினையை தீர்ப்பதே வேலையாகி விட்டது.

கண்ணீர் பூமிகா
சீரியல் தொடங்கியதில் இருந்தே பூமிகாவிற்கு கண்ணீர்தான். யாராவது தொலைந்து போக வேண்டும், இல்லையா விபத்தில் சிக்கி மருத்துவமனையில் படுக்க வேண்டும். அவர்களுக்காக விரதம் இருப்பது பூமிகாவின் வேலை.

மதன் மச்சான்
கணவன் மதனை திருத்தி அவனை தூக்கு தண்டனையில் இருந்து மீட்ட பூமிகாவிற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. அம்மா வசந்தா உடன் வீட்டை விட்டு துரத்த, மீண்டும் கண்ணீருடன் அம்மா வீட்டிற்கே வந்து விட்டாள் பூமிகா.

மதன் கடத்தல்
முகமூடி அணிந்த சிலர் மதனை கடத்த, அழுது கொண்டே வந்த வசந்தா பூமிகாவிடம் முறையிட, கொஞ்சம் கூட பதற்றப்படாமல், அழாமல் நடந்த விசயத்தை கேட்கிறாள் பூமிகா. இதுவே வசந்தாவிற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கணவனை கொன்ற பூமிகா
கடத்தப்பட்ட மதன் வீட்டு வாசல் முன்பு சடலாக இருக்க இதைப் பார்த்து அனைவரும் அழ, பூமிகாவோ பேசாமல் நிற்கிறாள். கொலை பற்றி போலீசில் கூறலாம் என்று மதனின் அம்மா சொல்ல, அதற்கு பூமிகாவோ, நான்தான் மதனை ஆள் வைத்து கடத்தி கொலை செய்தேன் என்று கூறுகிறாள்.

என்னதான் நடந்தது
கணவனே கண்கண்ட தெய்வம் என்று கூறி தொட்டு கும்பிட்ட பூமிகாவா இப்படி? ஏன் கொலை செய்தாள்? என்னதான் நடந்தது ஏன் என்று மண்டையை போட்டு குழப்பிக்கொண்டனர். எந்த திருப்பமும் இல்லாமல் போன வம்சம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆனாலும் இதெல்லாம் ஒரு சீரியலா? சீக்கிரம் முடிக்கப்பா என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications