50க்கும் மேற்பட்ட கோழிகள் மர்ம சாவு.. நீலகிரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவலா?
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதால் பறவை காய்ச்சல் பீதியில் அங்குள்ள மக்கள் உள்ளனர்.
கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பல ஆயிரம் கோழிகளும், வாத்துகளும் அங்கு கொன்று குவிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து, தமிழகம் வரும் வாகனங்களுக்கு மருந்து தெளித்த பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் வழியாக கேரளாவுக்கு செல்லும் நாடுகாணி, பந்தலூர் வழியாகச் செல்லும் சேரம்பாடி, சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு ஆகிய முக்கிய சாலைகளில் சுகா தாரத் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து நீலகிரிக்குள் நுழையும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கின்றனர்.
இதனிடையே நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பாக்னா, மோர்கடவு ஆகிய பகுதிகளில் வளர்ப்புக் கோழிகள் கடந்த இரு தினங்களாக திடீர் திடீரென இறந்து வருகின்றன. பாக்னா பகுதியில் இரு இடங்களில் 15 கோழி களும், மோர்கடவு பகுதியில் சுமார் 35 கோழிகளும் இறந்துள்ளன. இதனால், மக்களிடையே பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குநர் மனோகரன் தலைமையில் ஒரு குழுவினர் இறந்த கோழிகளின் மாதிரிகளை சேகரித்து அவற்றை பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பினர். மாவட்ட கலெக்டர் பொ.சங்கர், அப் பகுதிகளை ஆய்வு செய்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் டாம்ப்ளூ மாத்திரைகள் வழங்க அறிவுறுத்தபட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தை வேலு இன்று கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஆய்வு நடத்தினார்.
ஓர்க்கடவு கிராமத்தில் ஆய்வு நடத்திய பிறகு நிருபர்களிடம் பேசிய அவர் "நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சலால் கோழிகள் இறக்கவில்லை என்பது மேலோட்டமாக தெரிகிறது. வேறு நுண்கிருமிகளால்தான் கோழிகள் இறந்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம்" என்றார்.












Click it and Unblock the Notifications