உன் மகள் காதலித்து எங்காவது ஓடியிருப்பார் என்றனர் போலீஸார்: என்ஜினியர் உமாவின் தந்தை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வாழப்பாடியில் குடும்பத்தோடு வசித்தும் வரும் பாலசுப்ரமணியம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஓவிய ஆசிரியராக உள்ளார். அவரது மகள் உமா மகேஷ்வரி சென்னையில் தங்கி டி.சி.எஸ். நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தனது அலுவலகம் அருகே பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் மகளுக்கு ஏற்பட்டது போன்று வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. எங்கள் மகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அதற்கு அவர்கள் உங்கள் மகள் காதல் விவகாரத்தில் எங்காவது ஓடியிருப்பார், பொறுமையாக இருங்கள் கண்டுபிடிக்கலாம் என்று மெத்தனமாக பதில் அளித்தனர்.
சிப்காட் வளாகத்தை சுற்றி நன்கு சோதனை செய்யுமாறு எனது உறவினர்கள் வலியுறுத்தினார்கள். அதன்பேரில் சோதனை நடத்தியபோது தான் என் மகள் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உமாவை அருப்புக்கோட்டையில் இருக்கும் எனது உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்குள் இப்படி நடந்துவிட்டது. இறுதிச் சடங்கையாவது அருப்புக்கோட்டையில் செய்யலாம் என்று தான் என் மகளின் உடலை அங்கு கொண்டு சென்று தகனம் செய்தோம். குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications