"அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறவினர்கள் வீட்டில் ஐடி ரெய்டு நடக்கவில்லை"
கோவை: தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக வெளியான தகவல் தவறானது என்பது தெரியவந்துள்ளது.
கோவை மற்றும் கரூரில் இன்று சில இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இதில், கோவையில் உள்ள அன்பு என்பவர் வீட்டிலும், கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்றதாக வந்த தகவல்கள் அடிப்படையில் 'ஒன்இந்தியாதமிழ்' இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து விசாரித்து பார்த்தபோது, கிடைத்த தகவல்கள் அடிப்படையில், ரெய்டுக்கு உள்ளான அன்பு மற்றும் சந்திரேசகர் ஆகியோருக்கும், அமைச்சர் வேலுமணி மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் தொடர்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. இதே செய்தி டெய்லி ஹன்ட்டிலும் வெளியாகியிருந்தது. தவறான தகவலை வெளியிட்டதற்காக ஒன்இந்தியா தமிழ் வருந்துகிறது.