விஜயகாந்த்தின் அநாகரீக செயலுக்கு கண்டனம் தெரிவிக்காமல் கடைக்கண் பார்வைக்கு ஏங்கும் கட்சிகள்!
சென்னை: எதெற்கெடுத்தாலும், பத்திரிகை அறிக்கை வெளியிட்டே, தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொண்ட எந்த ஒரு கட்சியினரும், எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், பத்திரிகையாளர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட விதம் குறித்து கண்டனத்தை பதிவு செய்யாமல் மவுனம் காக்கிறார்கள்.
கொள்கை, கோட்பாடுகளை விட்டுவிட்டு, விஜயகாந்த்திடம் கூட்டணி வைக்க அவர்கள் கால்கடுக்க காத்திருப்பதுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் 5 சதவீதத்துக்கும் குறைவில்லாத வாக்கு வங்கி விஜயகாந்துடையது. கடந்த காலங்களில் வாக்குகளை சிதறடிக்க அவரது கட்சியால் முடிந்துள்ளது.
கடைக்கண் பார்வை
எனவே, திமுக, பாஜக, காங்கிரஸ், மக்கள் நல கூட்டணி என கட்சிகள் விஜயகாந்த்தின் வீட்டு வாசலில் காத்திருக்கின்றன. அவரது கடைக்கண் அசைவை எதிர்பார்த்து கண்ணில் விளக்கெண்ணை ஊற்றியபடி நின்கின்றன.
உளறல் அதிகமாயிடுச்சே
சும்மாவே ஆடும் கேப்டன், சலங்கை கட்டினால் சும்மா இருப்பாரா.. பொங்கலுக்கே பட்டாசு வெடிக்கும் விஜயகாந்த் தீபாவளி கிடைத்தால்விடுவாரா? வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என, அநாகரீகமாக, கண்டதையும் உளறி கொட்டி கெத்து என நினைத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளார்.
கொள்கை கூட்டணியாம்
திமுக, பாஜக, காங்கிரஸ் பற்றி மக்களுக்கு தெரியும். தேர்தல் அரசியலுக்காக எந்த சமரசத்தையும் செய்வார்கள். ஆனால் கொள்கை, கோட்பாடுக்காக அமைந்த கூட்டணி என்று தங்களுக்கு தாங்களே சர்டிபிகேட் கொடுத்துக்கொண்டது வைகோ, திருமாவளவன், நல்லகண்ணு போன்றோர் அடங்கிய மக்கள் நல கூட்டணிதான்.
வாய் மூடிய வைகோ
அந்த கூட்டணியில் இருந்தும், விஜயகாந்த்தின் அநாகரீக செயலுக்கு ஒரு கண்டன குரலும் வரவில்லை. இத்தனைக்கும், சீமை கருவேல மர பிரச்சினை முதற்கொண்டு, சீனாவின் மக்கள் தொகை வரை எந்த டாபிக்கையும் விடாமல், தினமும், ரெண்டு, மூன்று அறிக்கைவிட்டு, பத்திரிகையாளர்களிடம் பாசம் காட்டும் வைகோ, விஜயகாந்த்துக்கு எதிராக எதும் சொல்லிவிட கூடாது என்று வாயை மூடிக்கொண்டுள்ளாராம். கொட்டாவி வந்தால் கூட வாயை திறப்பதில்லை என்று கூறிக்கொள்கிறார்கள்.
பாவம் இடதுசாரிகள்
சினிமா நடிகரோ அல்லது மற்ற கவர்ச்சியோ முக்கியமில்லை, கொள்கைதான் முக்கியம் என முழங்கி வந்த இடதுசாரிகட்சிகளும், விஜயகாந்த்தின் சினிமா கவர்ச்சிக்கு ஆசைப்பட்டு வாய் திறக்கவில்லை. பாவம் அவர்களும் எத்தனை நாள்தான் மக்களே மறந்துவிட்ட கொள்கைகளை தூக்கி சுமப்பார்கள். பாரத்தை கொஞ்சம் இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறட்டும்.
ஓட்டு இருக்கில்லே
விஜயகாந்த் பின்னால் துரத்துவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன் "விஜயகாந்த் இன்னும் கூட்டணி முடிவை அறிவிக்காத தலைவர் என்பது, அவரை ஈர்க்க எடுக்கும் முயற்சிக்கு காரணம். தேமுதிக கட்சிக்கு 5 சதவீத வாக்கு வங்கி உள்ளது. இக்கணக்குப்படி, 2 லட்சம் வாக்காளர்கள் கொண்ட ஒரு தொகுதியில், 10 ஆயிரம் வாக்குகளாவது தேமுதிகவுக்கு ஆதரவாக இருக்கும். இதுவும் ஒரு காரணம்" என்றார்.
வலிக்காமல் அடித்த பொன்னார்
பாஜக சார்பில் மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், கருத்து கூறியுள்ளார். ஆனால், எங்கே வலித்துவிடுமோ என்ற வாஞ்சையோடு, மென்மையாக, விஜயகாந்த் அப்படி பேசியிருக்க தேவையில்லைதான் என்று தடவி கொடுத்துள்ளார். கூட்டணிக்காக யாரையும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை என்று கூறிவந்த திமுக, சமீபத்தில் தனது நிலையை மாற்றி விஜயகாந்த்துக்கு அழைப்புவிடுத்தது. எனவே ஸ்டாலின் இந்த த்தூ விவகாரத்தில் சப்பை கட்டுகட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சீமான் நறுக்
விஜயகாந்த்தை எதிர்பார்க்காத பாமக, நாம் தமிழர் போன்ற ஒரு சில கட்சிகளே, அவரின் அநாகரீக செயலை நேரடியாக கண்டித்து சமூக கடமையை செய்துள்ளன. கொள்கை, புரட்சி பற்றி பேசிய இடதுசாரிகளும், வைகோவும், திருமாவும், அப்படீன்னா என்னவென்றே தெரியாத விஜயகாந்த்திடம் கெஞ்சுவது வேதனையாக இருக்கிறது என்று நறுக்கென தைத்துள்ளார் சீமான்.
கொள்கையாவது, கோட்பாடாவது
விஜயகாந்த்துக்கு சற்றும் சளைக்காமல் வாய்க்கு வந்ததை பேசி நெகட்டிவ் பப்ளிசிட்டி பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், கப்சிப். சமூக நீதி, அரசியல் நாகரீகம் போன்றவை குறித்து மேடை, மேடையாக பேசும், இந்த தலைவர்கள், மக்கள் பலரால் திரும்ப, திரும்ப பார்க்கப்பட்ட நாகரீகமற்ற ஒரு செயலை கண்டிக்க கூட முன்வரவில்லை. இப்படிப்பட்ட இவர்கள் ஆட்சிக்கு வந்தால், சொன்னதை செய்வார்கள் என்று எப்படி நம்ப முடியும் என மக்கள் யோசிக்கிறார்கள்.