விஷாலை நான் அடிக்கவில்லை...: சரத்குமார் மறுப்பு
சென்னை: அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் விஷால் அணி பிரச்சாரம் மேற்கொண்டதே சலசலப்பிற்குக் காரணம் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தான் விஷாலைத் தாக்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் இன்று சென்னையில் நடந்து வருகிறது. காலை முதல் அமைதியாக நடந்து வந்த இந்தத் தேர்தலில், மதியம் 12 மணியளவில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது சரத்குமார் அணியினருக்கும், விஷால் அணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், விஷால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விஷால் மயங்கி விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் அல்லாத ஒருவர் தன்னைத் தாக்க முயன்றதாக விஷால் பரபரப்பு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சலசலப்புக்கான காரணம் குறித்து நடிகர் சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இது தான் காரணம்...
வாக்குச்சாவடி அருகே அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் விஷால் அணியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதனைத் தட்டிக் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நான் அடிக்கவில்லை...
மற்றபடி, அங்கு தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. விஷாலை நான் அடிக்கவில்லை. விஷால் நல்ல நடிகர் என்பதால் வெளியில் வந்து சீன் கிரியேட் செய்து விட்டார்.
விளக்கம்...
விஷாலை நான் அடித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாவது குறித்து கேள்விப்பட்டு நானாகவே விளக்கமளிக்க வந்துள்ளேன்.
சச்சு பெயர் நீக்கம்...
இன்றைய தேர்தலில் வாக்களிப்பவர்களின் பெயர் பட்டியல் நீதியரசரால் சரிபார்க்கப்பட்டது. அதில் சச்சு பெயர் இல்லாததை எதிரணியினர் முன்னரே சரி பார்த்திருக்க வேண்டும். உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காததால் சச்சு பெயர் அதில் இடம் பெறவில்லை.
1500 ஓட்டுகள்...
இதுவரை சுமார் 1500 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதேபோல், மோகனின் ஓட்டு முன்னதாகவே வேறு யாராலோ போடப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்தப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.