சாமிக்கு வைத்த பொங்கலைத் தின்ற "தோ... தோ" - 3 தலைமுறையாக பொங்கலைத் தவிர்க்கும் கிராமம்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் கடந்த 3 தலைமுறையாக பொங்கல் திருவிழாவை மக்கள் கொண்டாடுவதில்லை. காரணம் என்ன தெரியுமா.. அந்தக் கிராம மக்கள் சாமிக்காக படைத்த பொங்கலை நாய் தின்று விட்டுப் போனதால், தீட்டு ஏற்பட்டு விட்டதாக கூறி பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் உள்ளனராம் கிராம மக்கள்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. வழக்கமாக கிராமங்களில்தான் பொங்கல் பண்டிகை விசேஷமாக இருக்கும். ஊரே களை கட்டியிருக்கும். கால்நடைகளை சீவி சிங்காரித்து வீடு வீடாக, ஊர்ப் பொதுவில் பொங்கல் வைத்து விதம் விதமான விளையாட்டுக்களை நடத்தி விசேஷமாக கொண்டாடுவார்கள் கிராம மக்கள்.

ஆனால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சிங்கிலிப்பட்டி என்ற கிராமத்தில் கடந்த 3 தலைமுறையாக பொங்கலே கொண்டாடமல் அமைதியாக அதைக் கடந்து வருகின்றனர் மக்கள் என்பது ஆச்சரியமான செய்தியாகும்.
சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 3 தலைமுறைகளுக்கு முன்பு ஊர் மக்கள் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். அப்போது ஒரு பொங்கலின்போது, சாமிக்குப் படைப்பதற்காக, பானையில் வைக்கப்பட்டிருந்த பொங்கலை, ஒரு நாய் சாப்பிட்டு விட்டதாம்.
இதனால் தீட்டு ஏற்பட்டு விட்டதாக ஊர் மக்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து பொங்கல் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன.
அடுத்த ஆண்டு, பண்டிகையை கொண்டாட முற்பட்டபோது, கிராமத்தில், சில பசு மாடுகள், அடுத்தடுத்து இறந்தன. இது, கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. அதன் காரணமாக, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை, கிராம மக்கள் தவிர்த்தனர்.
அன்று முதல் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதை அக்கிராமத்து மக்கள் தவிர்த்து வருகின்றனர். இது மூன்று தலைமுறைகளாக தொடர்ந்து வருவதால் பொங்கல் பண்டிகையின்போது இந்தக் கிராமம் மட்டும் களையிழந்து காணப்படுகிறது.
'எதேச்சையாக நடந்த சம்பவத்தை வைத்து, கிராம மக்கள் பண்டிகை கொண்டாடத்தை தவிர்க்கக் கூடாது. தமிழரின் அடையாளமாக கருதப்படும் பொங்கல் பண்டிகையை, கிராம மக்கள் கொண்டாட வேண்டும்' என, இக்கிராமத்தை சேர்ந்த, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இளங்கோ வலியுறுத்தி வருகிறார். இவரே பத்து வருடத்திற்கு முன்பு தனது வீட்டில் பொங்கல் வைத்து வழிபட்டார். அப்போது அவரது பசு மாடு திடீரென சுருண்டு விழுந்து இறந்தது.
இது மக்கள் மத்தியில் மேலும் பீதியைக் கிளப்பியுள்ளது. ஆனாலும் இளங்கோ விடவில்லை. தொடர்ந்து பொங்கல் பண்டிகையை வருடந்தோறும் நடத்தி வருகிறார். இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு அவர் தயாராகி வருகிறாராம்.












Click it and Unblock the Notifications