ஏ.. கேட்டுச்சா.. 100 வருஷத்துக்கு அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாதாம்!
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. வைகைச் செல்வன், 100 வருடமானாலும் அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று அதிரடியாகப் பேசி அதிமுகவினரையே அட போட வைத்துள்ளார்.

நடக்கவே முடியாததையெல்லாம் நடந்தாலும் நடக்கலாம் என்பது போல சீன் போட்டுக் காட்டுவதுதான் தமிழக அரசியல். அந்த வகையில் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. வைகைச் செல்வன் அருப்புக்கோட்டையில் பேசிய பேச்சு அடடா அடடா என்று அதிமுகவினரையே புல்லரிக்க வைத்து விட்டது.
முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அதிமுக பிரச்சார கூட்டம் புதிய பேருந்து நிலையம், நேரு மைதானம், எம்.எஸ்.கார்னர், திருநகரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் எம். எல்.ஏ. தலைமை வகித்தார்.
இதில் வைகைச் செல்வனின் பேச்சிலிருந்து சில துளிகள்...
- அருப்புக்கோட்டை அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்குகிறது.
- ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட முடியும்.
- கடந்த திமுக ஆட்சியின் திட்டங்களை பட்டியலிட முடியாது.
- 40 வருடம் யாராலும் செய்ய முடியாத அளவிற்கு நான்கரை ஆண்டுகளில் சாதனை செய்துள்ளோம்.
- அருப்புக்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி, வட்டார போக்குவரத்து அலுவலகம், ஜ.டி.ஜ., டிராபிக் போலீஸ் ஸ்டேசன் அமைத்துள்ளோம்.
- ரூ.100 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சாலை போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று செய்துள்ளேன்.
- ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கொண்ட பேரியக்கம் அதிமுக
- இந்தப் பேரியக்கத்தை பார்த்து திமுகவினர் வரும் காலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியை போன்று அதிமுக நூறாகி விடும் என்று கூறியுள்ளனர்.
- ஜெயலலிதாவிற்கு ஒரு துன்பம் என்று வந்தவுடன், 250க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் தீக்குளித்து உயிரை மாய்த்தனர்.
- அதிமுகவை 100 ஆண்டு காலம் யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.
- கடந்த திமுக ஆட்சியின் போது நீர், நிலம், காற்று, ஆகாயம், வானம் ஆகிய எல்லாவற்றிலும் ஊழல் செய்தார்கள்.
- திமுக வரும் தேர்தலோடு முகவரி இல்லாமல் விரட்டப்படும்.
- இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத ரூ. 5 ஆயிரம் வட்டி இல்லா கடனை வழங்கிய ஒரே முதல்வர் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications