திடீரென வந்த சத்தம்.. திருட வந்ததாக வடமாநில தொழிலாளி அடித்தே கொலை.. செங்கல்பட்டில் என்ன நடந்தது?
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரில் கட்ட வேலை செய்ய வந்த வட மாநில தொழிலாளியை திருட வந்ததாக நினைத்து அடித்துக் கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரில் கட்ட வேலை செய்ய வந்த வட மாநில தொழிலாளியை திருட வந்ததாக நினைத்து கட்டிப்போட்டு அடித்ததால், அந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கொலை முயற்சி வழக்காக இருந்த நிலையில், கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பழைய மகாலபலிபுரம் சாலையில் உள்ள தாழம்பூரில் வடமாநில தொழிலாளி ஷேத்ரா பர்மன் வயது 43. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கட்டிட வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஷேத்ரா வர்மன் காரணை நேரு தெருவில் கடை ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து நேராக கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அவர் வழி தெரியாமல் அருகீல் உள்ள வீடுகளின் கதவுகளை தட்டினாராம். இதனால் பயந்து போன அப்பகுதி மக்கள் திருட வந்ததாக நினைத்து வட மாநில தொழிலாளியை தாக்க தொடங்கி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வடமாநில தொழிலாளியை கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கினார்களாம். இதில் படுகாயம் அடைந் வடமாநில தொழிலாளி ஷேத்ரா வர்மனை அவர்கள் அப்படியே விட்டு விட்டு போய்விட்டனராம்.

உயிரிழப்பு
இதற்கிடையே அடுத்த நாள் காலை தான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போலீசார் படுகாயம் அடைந்த வடமாநில தொழிலாளியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேத்ரா வர்மன் உடல் நிலை மோசம் அடைந்ததால் செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செவ்வாய்கிழமை அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

வீடுகளை தட்டினார்
வடமாநில தொழிலாளி மரணம் தொடர்பாக முதலில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த போலீசார், தற்போது கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். கடந்த 6 மாத காலமாக பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும், சம்பவம் நடந்த அன்று இரவு சாப்பிட்டு விட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. கொலை செய்யப்பட்ட ஷேத்ரா வர்மன், தான் பணி செய்யும் இடத்திற்கு செல்லும் வழி மறந்ததால், அக்கம் பக்கம் உள்ள வீடுகளை தட்டியிருக்கிறாராம்.

பொது மக்கள் தாக்குதல்
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், திருட வந்த வடமாநிலத்தவராக கருதி அவரை கல்லால் தாக்கி உள்ளனர். பின்னர் அவரை உருட்டு கட்டையால் தாக்கி உள்ளனர், இதில் படுகாயம் அடைந்த வடமாநில தொழிலாளி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவநதுள்ளது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (32), ராஜா (28), உதய சங்கர் (37), விக்னேஷ் (29), பால முருகன் (33), ரமேஷ் (28) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவங்கள்
அண்மையில் சென்னை பெரம்பூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் அடுத்தடுத்து வடமாநில கொள்ளை சம்பவம் நடந்த நிலையில் வடமாநில கொள்ளையர்கள் குறித்து அச்சம் காரணமாக இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. என்ன நடந்தது? யார் என்று விசாரிக்காமல் அப்பாவி வடமாநில தொழிலாளியை திருடன் என்று மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications