சின்ன காய்ச்சல்தான்.. தலைவர் நல்லாருக்காரு.. வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் ஸ்டாலின்!
திமுக தலைவர் நலமுடன் உள்ளார்.. மு.க.ஸ்டாலின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
Recommended Video
சென்னை: திமுக தலைவருக்கு சிறு காய்ச்சல்தான் வந்துள்ளதாகவும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் பரவி வந்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாகவே வயது முதிர்வு, மற்றும் உடல்நிலை காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். உடல்நலனில் பிரச்சனை ஏற்படும் சமயங்களில் கவேரி மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார். கடந்த 18-ம் தேதி கூட அவருக்கு, தொண்டையில் இருந்த குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் வைக்கப்பட்டது.
இந்த சிகிச்சையும் ஒரே நாளில் நடைபெற்று முடிந்துவிட்டது. அதாவது மதியம் 1.30 மணி அளவில் சிகிச்சை தொடங்கி அன்றைய தினமே மாலை 4 மணிக்கெல்லாம் வீட்டிற்கு திரும்பிவிட்டார் கருணாநிதி. இதற்கு பிறகு அவர் நலமுடன் உள்ளார். ஆனால் தொண்டையில் இருந்த குழாய் அகற்றப்பட்ட காரணத்தினால் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவ தொடங்கின. குறிப்பாக நேற்று இரவிலிருந்தே இந்த வதந்திகள் அதிகமாக தொடங்கின. இதனால் திமுக தொண்டர்களிடையே சிறு கலக்கமும், பதட்டமும் உருவானது.
ஆனால் வதந்திகளுக்கும், தொண்டர்களின் கலக்கத்திற்கும் மு.க.ஸ்டாலின் உரிய விளக்கம் அளித்து அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதனிடையே தன்னுடைய தொகுதியான கொளத்தூருக்கு இன்று காலை சென்றிருந்தார் ஸ்டாலின். அப்போது செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நிலை, மற்றும் வதந்திகள் குறித்து கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு ஸ்டாலின், "திமுக தலைவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பதெல்லாம் வெறும் வதந்திதான். அவருக்கு சிறு காய்ச்சல் வந்துள்ளது. அதற்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். எனவே பயப்படும்படி, அதிர்ச்சியாகும்படி எதுவுமே இல்லை. வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் அவர் நன்றாக ஓய்வு எடுத்து வருகிறார்" என்றார். திமுக தலைவருக்கு எனவே பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்று பரவி வந்த வதந்திகளுக்கு ஸ்டாலின் உரிய விளக்கம் அளித்ததையடுத்து, அக்கட்சியின் தொண்டர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.