எல்லா அமைச்சர்களுடன் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தோம்: செல்லூர் ராஜு தடாலடி பேட்டி
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அனைத்து அமைச்சர்களும் பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அனைத்து அமைச்சர்களும் பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலா குடும்பத்தினர் தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா குடும்பத்தினரும், ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியினரும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர்.
ஜெ.வை யாரும் பார்க்கவில்லை
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் யாரையும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்றார்.
பொய் சொன்னோம்
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று கூறியதெல்லாம் பொய் என்றார். பொய் கூறியதற்காக மக்களிடம் பகீரங்கமாக அவர் மன்னிப்பு கேட்டார். யாராவது சந்தித்தால் தான் கொல்லப்படுவதை ஜெயலலிதா கூறிவிடுவார் என்பதால் சசிகலா குடும்பத்தினர் யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஒப்புக்கொண்ட மதுசூதனன்
அதிமுக அவைத் தலைவரான மதுசூதனனும் திண்டுக்கல் சீனிவாசன் கூறுவது உண்மைதான் என்றார். நாங்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என ஒப்புதல் அளித்தார்.
நாங்கள் எல்லோரும் பார்த்தோம்
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தோம் என தெரிவித்துள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் பார்க்கவில்லை என தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் பேச்சால் சர்ச்சை
அமைச்சர்களின் முன்னுக்குப் பின் முரணான பேச்சால் பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜெயலலிதா மரண விவகாரம் சூடுபிடித்துள்ளது.