டெண்டர் விடப்பட்ட சாலைப்பணி... அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் சாலைமறியல்
தேனி: தேனி மாவட்டம் மல்லாபுரத்துக்கும் மயிலாடும்பாறைக்கும் இடையேயான சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்ட நிலையில், அங்கு பணியை தொடங்குவதற்கு அதிகாரிகள் போதிய அக்கறை காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தையும், தேனி மாவட்டத்தையும் இணைக்கக் கூடிய பகுதியான மல்லாபுரம் -மயிலாடும்பாறை இடையே 6 கி.மி.தூரத்திற்கு புதிய தார் சாலை அமைக்க கடந்த ஜனவரி 19-ம் தேதி டெண்டர் விடப்பட்டது. சாலை அமைக்கப்பட உள்ள இடம் வனச்சரகத்துக்குள் வருவதால் டெண்டர் விடும் பணிகளை வனத்துறையினரே மேற்கொண்டனர். திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மண்டல வன வலுவலகத்தில் வைத்து டெண்டர் விடப்பட்டது. அந்தப் பணியை மதுரையை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் மகன் எடுத்துள்ளார்.

இந்நிலையில் சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்குவதற்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்காததால் ஒப்பந்ததாரர் இன்னும் சாலை அமைக்கும் பணியை தொடங்கவில்லை. இதனிடையே தங்கள் கிராமத்திற்கு விரைந்து சாலை அமைத்து தரவேண்டும் என்றும், இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறி மல்லாபுரம் கிராமமக்கள் இன்று நண்பகல் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மல்லாபுரம்-மயிலாடும்பாறை இடையே விரைந்து சாலைபணிகளை தொடங்க வனத்துறை அதிகாரிகள் தரப்பில் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதன் பின்னர் போராட்டத்தை கைவிட்ட மக்கள், 6 கி.மீ.தூரத்திற்கு சாலை போடப்படக்கூடிய இடத்தில் 3 கி.மீ. மதுரை மாவட்டத்திலும், 3 கி.மீ. தேனி மாவட்டத்திலும் வருவதால் எல்லை பிரச்சனையை மையமாக வைத்து அதிகாரிகள் அலட்சிய போக்குடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினர். மேலும், வனச்சரக அலுவலரை சந்தித்து முறையிட்டு பலன் கிடைக்காவிட்டால், மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் கூறினர்.












Click it and Unblock the Notifications