கோவைத் தொடர் குண்டுவெடிப்பு: 16 ஆண்டுகளுக்குப் பின் முக்கியக் குற்றவாளி கேரளாவில் கைது
கோவை: கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 16 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியை நேற்று கேரளாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 58 பேர் இறந்தனர், 250 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 168 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த கோவை தனிக்கோர்ட்டு 2007-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில் தொடர்புடைய முஜ்புர் ரகுமான், டெய்லர் ராஜா, லூகு, மொய்தீன், குஞ்சு முகமது (வயது 58) ஆகியோரைப் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கேரளாவில் தனது உறவினர் வீட்டில் குஞ்சு முகமது தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில், கேரளா விரைந்த சிபிசிஐடி போலீசார், குண்டுவெடிப்பு நிகழ்ந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆனநிலையில், நேற்று கேரள மாநிலம் மலப்புரம் பழக்கன்கராவில் குஞ்சு முகமதுவைக் கைது செய்தனர்.
பின்னர், கோவை அழைத்து வரப்பட்ட குஞ்சு முகமது விசாரணைக்கு பிறகு கோவை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு செல்வக்குமார் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, குஞ்சு முகமது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது வெடிபொருட்களை கை மாற்றி கொடுத்ததாகவும்,பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications