எஸ்.ஆர்.எம். பச்சமுத்து கொலை மிரட்டல் வழக்கிலும் கைது?
சென்னை: ரூ75 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்து மீது கொலை மிரட்டல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கொலை மிரட்டல் வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மருத்துவ கல்லூரியில் சீட் தருவதாக கூறி 112 பேரிடம் ரூ75 கோடி மோசடி செய்தார் பச்சமுத்து என்பது புகார். இப்புகாரின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த வெள்ளிக்கிழமையன்று பச்சமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
பச்சமுத்து தமக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. இதனிடையே பச்சமுத்து போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் சினிமா பைனான்சியர் போத்ராவுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக பச்சமுத்து மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பச்சமுத்து மீது காசோலை மோசடி புகார் கொடுத்ததால் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சினிமா பைனான்சியர் போத்ரா சென்னை காவல் துறை ஆணையரிடம் 2 நாட்களுக்கு முன்னர் புகார் அளித்திருந்தார்.
இப்புகாரின் அடிப்படையின் போத்ராவுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பச்சமுத்து மீது பிரிவு 501இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் பச்சமுத்து மீண்டும் கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.