போன தீபாவளிக்கு 29 சிறப்பு ரயில்கள்.... இந்த வருஷம் 12 தானா? கடும் அதிருப்தியில் பயணிகள்!
சென்னை: தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி கடந்த வருடம் 29 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த வருடம் குறைந்த அளவாக 12 சிறப்பு ரயில்களே இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பதால் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் கடைசி நேரத்தில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாக நேரிடும். மேலும், சரியான நேரத்தில் இயக்கப்படாத சிறப்பு ரயில்களால் சென்னை பயணிகளுக்கு பயனில்லை என்பதும் பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அதிகரித்தாலும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும், சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பும் தாமதமாகவே வெளியாகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளான நவம்பர் 10 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசல் இருக்கும்.
இதனால் பண்டிகை காலங்களில் தென் மாவட்டங்களுக்குக் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆண்டுதோறும் எழுப்பப்படுகிறது. அதேபோல கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனால் ஆண்டுதோறும் பண்டிகைகளுக்கு தாமதமாகவே சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு இயக்கப்பட்ட 29 சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூபாய் 1 கோடியே 93 லட்சத்து 67 ஆயிரம் வருமானம் கிடைத்தது. ஆனால், இந்த வருவாய் எதிர்பார்த்ததைவிடக் குறைவு என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தீபாவளிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு 7 சிறப்பு ரயில்களும், தென் மாவட்டங்களான திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு 13 ரயில்களும், வெளி மாநிலங்களுக்கு 9 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.
பயணிகளின் தேவையை அறிந்து அதற்கு ஏற்ற தேதிகளில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் ரயில்வே துறையோ பண்டிகைக்கு வெகு நாள்களுக்கு முன்போ அல்லது பிறகோ சிறப்பு ரயில்களை இயக்குகின்றன. இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில்களால் பயன் இல்லாமல் போய்விட்டது. ரயில் பெட்டிகள் இருப்பதால் சிறப்பு ரயில்களை இயக்குவதை விட்டுவிட்டு பயணிகளின் தேவைக்கு ஏற்ப ரயில்கள் இயக்கப்பட்டால் ரயில்வேக்கு வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில் ரயில் முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பே செய்துவிடலாம் என்பதால் அனைத்து முக்கிய ரயில்களிலும் காத்திருப்பு பட்டியல் 300 ஐ தாண்டி முடிந்துவிட்டது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 12 சிறப்பு ரயில்கள், ஆயிரக்கணக்கான பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யுமா என்பதே கேள்விக் குறியாக உள்ளது என்கின்றனர் பயணிகள்.












Click it and Unblock the Notifications