மதுரையில் எடப்பாடி போட்டி? 'ஓபிஎஸ்ஐ சேர்த்துக் கொள்ள இபிஎஸ் தயார்'.. செல்லூர் ராஜூ பேட்டி
சென்னை: ஓபிஎஸ் அதிமுகவில் வந்தால் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கு, ஓபிஎஸ், எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கடிதம் கொடுத்தால் சேர்த்துக் கொள்வார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
பிரபல தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார். அப்போது அவரிடம் நெறியாளர், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்கிவிட்டார்கள். இதனால் அவரை சுற்றி இருக்ககூடிய தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்,ஆனால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறுகிறார்களே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, தொண்டர்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் எழுச்சியான கூட்டம் இருக்காது. நாங்கள் மட்டும் தான் சந்தித்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லையே, மதுரைக்கு எடப்படி பழனிசாமி வந்த போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்டது போல் வரவேற்பு கொடுத்தார்கள். தொகுதி வாரியாக ஆறு இடத்தில் வரவேற்பு கொடுத்தோம். மக்கள் எழுச்சியாக வரவேற்பு கொடுத்தார்கள் என்றார்.
இதற்கு நெறியாளர், நான் பெரிய கூட்டத்தை கூட்டி காட்டுகிறேன் பாருங்கள் என்று ஓபிஎஸ் கூறுகிறாரே, அப்படி என்றால் நீங்கள் சொல்வது போல் அவருக்கும் கூட்டம் வருமே என்றார். அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, யார் வேண்டுமானாலும் கூட்டம் கூட்டலாம். காசு கொடுத்தால் கூட்டம் வரும். ஆனால் மக்கள் எழுச்சியாக வருவது என்பது வேறு என்றார்.

மதுரையில் எடப்பாடி: அப்போது நெறியாளர் கேட்கும் போது, இப்போது அதிமுக வழக்கில் எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட ஒரு வருட போராட்டத்திற்கு பின், நீதிமன்றமே அவரை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டிருக்கிறது.இதை இன்னும் எளிமையாக முடித்திருக்கலாம் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? என கேட்டார்.அதற்கு செல்லூர் ராஜூ பதில் அளிக்கையில், இகோ பிரச்சனை தான் காரணம்.ஓபிஎஸ்ஸை கூட இருப்பவர்கள் தவறாக வழிநடத்தி விட்டார்கள்.
எடப்பாடியை ஒற்றை தலைமையாக்க வேண்டும் என்று ஓபிஎஸ் இடம் போய் மேல்மட்ட தலைவர்கள் எல்லோருமே பேசினார்கள். ஆனால் அவர் வராததால் தான் பிரச்சனை ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இப்போது அதிமுக வலிமையாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு சுக்ர திசை அடிக்கிறது. நாளைக்கு தேர்தல் வைத்தாலும், தமிழக முதலமைச்சராக எடப்பாடி வந்துவிடுவார். அந்த அளவிற்கு இருக்கிறது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விருப்பப்பட்டால் மதுரையில் நிற்பாட்டி நானே ஜெயிக்க வைப்பேன் என்றார்.

ஈரோடு தேர்தல்: அப்போது நெறியாளர், எடப்பாடி தலைமையேற்ற பின்னர் ஒரு தேர்தலில் கூட நீங்கள் ஜெயிக்கவில்லையே, சமீபத்தில் ஈரோட்டில் நடந்த தேர்தலில் உங்கள் கோட்டையிலேயே 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுளீர்கள், உள்ளாட்சி தேர்தலிலும் ஜெயிக்கவில்லையே என்று கேள்வி எழுப்பினார் அதற்கு செல்லூர் ராஜூ பொதுவாக ஆளும் கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள். ஈரோட்டில் திமுக பல்லாயிரம் ரூபாய ஒவ்வொரு வாக்குக்கும் செலவழித்து காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளது. இந்தசூழலிலும் நாங்கள் 44 வாக்குகள் பெற்றுள்ளோம் என்றார்.
ஓபிஎஸ்ஸை சேர்ப்போம்: ஓபிஎஸ் அதிமுகவில் வந்தால் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கு, ஓபிஎஸ், எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கடிதம் கொடுத்தால் சேர்த்துக் கொள்வார். மன்னிப்பு கடிதம் எல்லாம் தேவையில்லை.ஈபிஎஸ்ஐ பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம். அப்படி ஒன்று நடந்தால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முடிவெடுப்பார்கள். ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது. அதுபிரச்சனைக்குரியதாக இருந்தது.












Click it and Unblock the Notifications