மோடியை மதுரையில் சந்தித்த ஓபிஎஸ் அணி.. காரணம் தெரியுமா?
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் தனி அணி எம்எல்ஏக்களுடன் சந்தித்து பேசினார்.
சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு மதுரை திரும்பிய பிரதமர் மோடியை விமான நிலையத்தில், ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், நீட் தேர்வு விவகாரத்தில் விலக்கு அளிக்கக் கோரியும், தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

கச்சத்தீவு மற்றும் இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்துவது குறித்தும் பிரதமரிடம் பேசினேன். தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினோம் என்றும் கூறினார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே டெல்லி சென்று பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மாறி மாறி சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் வந்த பிரதமரை தனது அணி எம்.பி, எம்எல்ஏக்களுடன் நேரில் சந்தித்து பேசியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications