மதுக்கடையை மூடக் கோரி போராடி கைதான 15 பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காந்தியவாதி சசிபெருமாளின் மரணத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுவிலக்கு தொடர்பான போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன. ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தவகையில், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், அமைந்தகரையில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென கடைக்குள் புகுந்த மாணவர்கள் அங்கிருந்த மதுபாட்டில்களை உடைத்து நொறுக்கினர்.
போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைத்தனர். இந்தப் போராட்டத்தின் போது மாணவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட 5 மாணவிகள் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், இந்த 15 மாணவர்களும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். அவர்களின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications