தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பல்லடம் பெண் - சிகிச்சை பலனின்றி மரணம்
பல்லடம்: பல்லடம் அருகே தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள தொட்டம்பட்டி பள்ளக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி ராணி(35). சம்பவத்தன்று இரவு 7 மணி அளவில் வீட்டிற்கு வெளியே வந்த ராணியை பாம்பு ஒன்று கடித்தது.
ராணியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தார் பாம்பை அடித்துக் கொன்றனர். பின்னர், அப்பாம்புடன் ராணியை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு ராணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. எனினும் சிகிச்சைப் பலனின்றி ராணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.