ஆசிரியர்களை மகிழ்வித்து மகிழும் குடும்ப விழா!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர்களை மகிழ்வித்து மகிழும் குடும்ப விழா சிறப்பாக நடைபெற்றது
மாலை 4.30 மணியளவில் ஆறாம் வகுப்பு "அ" பிரிவு பெற்றோர்கள் சார்பில் ஆசிரியர்களை மகிழ்வித்து மகிழும் குடும்ப விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பெற்றோர் ஆசிரியக் கழகத் தலைவர் சகாய அமலன் அவர்கள் தலைமையேற்றார். பெற்றோர் சார்பில் மு. ஸ்ரீதேவி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பல்வேறு விருதுகள்
இந்நிகழ்வில் தொடர்ந்து பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி, அதிகரித்து வரும் மாணவர் சேர்க்கை,பள்ளியின் வளர்ச்சியில் முழு ஈடுபாடு, சிறந்த பள்ளிக்கான விருது, தூய்மைப்பள்ளிக்கான மாநில விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து, தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் அரசு பள்ளியை முன்நிறுத்தி வருதல், போன்ற செயல்களை பாராட்டியும், வாழ்த்தியும் தலைமையாசிரியர் . பீட்டர் ராஜா அவர்களுக்கு பெற்றோர்கள் நினைவு பரிசு வழங்கி கௌரவம் செய்தனர்.
ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு
மேலும் உதவி தலைமையாசிரியர்களான எஸ். விஜயலட்சுமி, அ. முத்துவேல்ராஜன், மு. கோமதிஜெயம், ஆறாம் வகுப்பு "அ" பிரிவு ஆசிரியர்கள் ஆகியோர்க்கு இரண்டாம் பருவத் தேர்வில் முதல் ஐந்து இடம் பெற்ற மாணவர்கள் பி. மகாலட்சுமி, எம்.நிஷாலி, ஜே.கே.ஜனனி, வி.அபிநயா, ஆர்.ஆகாஸ் ஸ்ரீ மூலம் மரியாதை செய்யப்பட்டு, அம்மாணவர்களின் பெற்றோர்களால் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளிக்கான நினைவுப் பரிசு
பள்ளிக்கான நினைவு பரிசை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சகாய அமலன் வழங்க தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார். பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழுத் தலைவர் சகாய செல்வன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அழகு சுந்தரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நடன நிகழ்ச்சி, பாட்டுக்குப் பாட்டு
இந் நிகழ்வில் பெற்றோர்கள்,ஆசிரியர்களை மகிழ்விக்கும் வகையில் மாணவர்கள் மூலம் நடன நிகழ்ச்சி, பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி ஆகிய கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
பெற்றோர்களுக்கு லக்கி கார்னர்
மேலும் பெற்றோர்களுக்கான லக்கி கார்னர் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு உணவு விருந்து அளித்து மரியாதை செலுத்தினர்.
பெற்றோர்களின் ஏற்பாடு
நிகழ்ச்சியின் இறுதியில் வகுப்பு ஆசிரியர் கோமதி ஜெயம் அவர்கள் ஏற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்களை பெற்றோர் சார்பில் தனபாக்கியம் அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், பெற்றோர்களே செய்திருந்தனர்.