உலகக் கோப்பை, யூரோ கோப்பை அணிகள் போலத் தான் மநகூ-யின் வெற்றியும் தோல்வியும் - சொல்கிறார் வைகோ
சென்னை: உலக கோப்பை, யூரோ கோப்பை போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அணி தோல்வி அடைந்து விடலாம். தோல்வி அடைந்த அணி வெற்றி பெறலாம். இதே போன்று எங்கள் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்சியில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் மதிமுக சார்பில் நடத்தப்படுகிறது. தேர்தல் சமயத்தில் சில கட்சிகள் கூட்டணிக்கு வரலம், பின்னர் விலகிச் செல்லலாம். ஆனால், முன்பு தெரிவித்தது போலவே, 4 கட்சிகளும் நிரந்த கூட்டியக்கமாக செயல்படும்.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ஆகிய நான்கு கட்சிகளும் கூட்டியக்கமாக எங்களது பயணத்தை தொடருவோம். சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து தற்போது பேசவிரும்பவில்லை.
மல்யுத்தத்திலே விழுந்து விடலாம். உலக கோப்பை, யூரோ கோப்பை போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அணி தோல்வி அடைந்து விடலாம். தோல்வி அடைந்த அணி வெற்றி பெறலாம். இதே போன்று எங்கள் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று அவர் கூறினார்.