தேமுதிக மாநாடு.. வாலண்டியராக வந்து விஜயகாந்த்துக்கு வாழ்த்து சொல்லி துண்டுபோடும் ம.ந.கூ.
சென்னை: தே.மு.தி.க.வின் அரசியல் திருப்புமுனை மாநாடு மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறோம் என்று மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
காஞ்சியில் நாளை தேமுதிக அரசியல் திருப்புமுனை மாநாடு நடைபெறுகிறது. இதில் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விஜயகாந்த் முடிவை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், விஜயகாந்த்தை தங்களோடு இணைந்து தேர்தலை சந்திக்குமாறு கோரிக்கை விடுத்துவரும் மக்கள் நலகூட்டணி தலைவர்கள், மாநாட்டுக்கு முந்திக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கூட்டு வாழ்த்து
மக்கள் நல கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இடதுசாரி கட்சிகளின் சார்பில், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் இரா.முத்தரசன் ஆகியோர் கூட்டாக வாழ்த்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அழைப்பிதழுக்கு நன்றி
இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2016 பிப்ரவரி 20ம் நாள் காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அரசியல் திருப்புமுனை மாநாட்டு அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றோம். அழைப்பிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாறி மாறி ஆட்சி
தமிழக அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் மிக முக்கியமான காலகட்டத்தில், இந்த மாநாடு நடைபெறுகிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைவுக்குப் பின், தமிழ்நாட்டை மாறிமாறி ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் சக்தி எழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும், ஏக்கத்திலும் தமிழக மக்கள் உள்ளனர்.
வாழ்த்துகிறோம்
இதனைத் தே.மு.தி.க.வின் தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நன்றாக அறிவார்கள். இந்தப் பின்னணியில் நடைபெறுகின்ற தே.மு.தி.க.வின் அரசியல் திருப்புமுனை மாநாடு, தமிழ்நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் திருப்பத்திற்குக் கட்டியம் கூறும் மாநாடாக வெற்றி பெற, மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.