தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை - பொது நல வழக்கு

இதுகுறித்து, வழக்கறிஞர் பி.அருள்மொழிமாறன் தாக்கல் செய்துள்ள மனுவில், "இந்திய பாராளுமன்றத்தில், 1983-ம் ஆண்டு சட்டவிரோத குடியேற்ற சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்டம் முழுவதும் மக்களுக்கு விரோதமானது. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்கிறோம் என்று உச்சநீதிமன்றம் 12-7-2005 அன்று தீர்ப்பளித்துள்ளது.
பூடான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு குடியேறிய ‘சக்காஷ்' என்ற இனத்தை சேர்ந்த 65 ஆயிரம் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சக்காஷ் இன மக்களுக்கு குடியுரிமை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு லட்சம் இலங்கை தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். அதில் 70 ஆயிரம் பேர் 115 அகதிகள் முகாம்களிலும், 35 ஆயிரம் பேர் வெளியிலும் வசிக்கின்றனர். இவர்களும், சக்காஷ் இன மக்களை போல், 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் வாழ்கின்றனர்.
ஓரு மனிதனின் ஆயுள்காலம் சுமார் 60 அல்லது 70 ஆண்டுகள் ஆகும். அதில், 30 ஆண்டுகளுக்கு மேல் குடியுரிமை இல்லாமல் வாழ்வது என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மனித தன்மைக்கு எதிரானது.
தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications