பியூஸ் மனுஷூக்கு ஜாமீன் கிடைக்குமா? விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
சேலம்: சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன் கிழமைக்கு ஒத்தி வைத்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனகூறி மாற்று பாதை அமைக்கக் வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பியூஸ் மனுஷ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பியூஸ் மனுஷிக்கு ஜாமின் கேட்டு அவரது மனைவி மோனிகா சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஷேசசாயி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பியூஸ் மனுஷ் வழக்கறிஞர் ப.பா.மோகன், அரசு வழக்கறிஞர் தனசேகரின் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஒரு மணி நேரம் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் தொடங்கியது.
அப்போது, பியூஸ் மனுஷ் போன்ற சமூக ஆர்வலர்களின் ஆதரவு நாட்டிற்கு தேவை. தனிமனிதனாக இது போன்ற பிரச்சனைகளில் போராடினால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. சமூக அமைப்புகள், முற்றுகை போராட்டம், சாலை மறியல் போராட்டம் போன்றவற்றில் ஈடுபடும் சமயத்தில் மக்களுகளுக்கு பாதிப்பு ஏற்படும். சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரதம், பேரணி போன்ற அறவழிப் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.
முதலில் பிரச்சனைகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன்பின்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடலாம். தனிமனிதனாக ஆர்ப்பாட்டம், மறியல் என போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படும் நிலை ஏற்படும் என நீதிபதி கூறினார்.
இதையடுத்து, பியூஸ் மனுஷிக்கு ஜாமின் வழங்கக் கூடாது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் ரயில்வே மேம்பால பணிகள் பாதிக்கப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமின் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications