எல்லார் மேலயும் சத்தியம்... அதிமுக, திமுக கூட கூட்டணி கிடையாது!: அடித்துச்சொல்லும் டாக்டர் ராமதாஸ்
மதுரை: அ.தி.மு.க அரசு மதுவிலக்கு கொண்டு வந்தால் வரவேற்போம். அதற்காக அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். திராவிடக் கட்சிகள் தமிழகத்தைச் சீரழித்துவிட்டன. எனவே, இந்த இரண்டு கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று சத்தியம் செய்து கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்
சோழமண்டலம், கொங்கு மண்டலம், வேலூர் என மண்டல ரீதியாக மாநாடு நடத்தி வரும் பாமக ஆகஸ்ட் 23ம் தேதி மதுரையில் பாண்டிய மண்டல மாநாடு நடத்த உள்ளது.
மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் வழக்கம் போல பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராமதாஸிடம், 'தமிழகத்தில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் பா.ம.கவால் எப்படி தனித்து ஆட்சி அமைக்க முடியும்?' என்று கேட்டனர்.
ஆட்சியமைப்போம்
செய்தியாளர்களிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ? கொஞ்சம் கூட யோசிக்காமல் பதிலளித்த ராமதாஸ், ஏன் முடியாது. டெல்லியில் ஆம் ஆத்மி அமைக்கவில்லையா? மாற்றத்தை விரும்பும் மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். எங்கள் தலைமையை ஏற்கும் பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்' என்றார்.
மதுவிலக்கு வரவேற்பு
திடீரென்று ஏதோ யோசனை செய்தவராய் செய்தியாளர்களைப் பார்த்து, 'அ.தி.மு.க அரசு மதுவிலக்கு கொண்டு வந்தால் வரவேற்போம். அதற்காக அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.
சத்தியமா சொல்றேன்
திராவிடக் கட்சிகள் தமிழகத்தைச் சீரழித்துவிட்டன. எனவே, இந்த இரண்டு கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி கிடையாது. உங்கள் மீதும், என் பிள்ளைகள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், பேத்திகள் மீதும் சத்தியம் செய்கிறேன்.
பத்திரிகையாளர்களுடன் கூட்டணி
இதற்கு முன் அதிமுக, திமுக உடன் மாறி மாறி கூட்டணி வைத்ததற்கு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். இனி உங்களுடன் மட்டும்தான் (பத்திரிகையாளர்கள்) கூட்டணி' என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் டாக்டர் ராமதாஸ்.