மோடி அமைச்சரவையில் பாமக, தேமுதிகவுக்கு இப்போதைக்கு 'நோ சான்ஸ்'?
சென்னை: மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இப்போதைக்கு 3 கூட்டணிக் கட்சிகளுமே சேருமா் போலத் தெரிவதால் தமிழகத்தைச் சேர்ந்த கூட்டணிக் கட்சிகளுக்கு இப்போதைக்கு வாய்ப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி அமைச்சரவை கிட்டத்தட்ட இறுதியாகி விட்டதாக தெரிகிறது. இதில் பாஜக போக கூட்டணிக் கட்சிகளாக 3 மட்டுமே முதல் கட்டமாக இணைவதாக தெரிகிறது.

மகாராஷ்டிராவின் சிவசேனா, பீகாரின் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி, சீமாந்திராவின் தெலுங்கு தேசம் ஆகியவை மட்டுமே முதல் கட்டமாக அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு முதல் கட்டமாக அமைச்சரவையில் இடம் கொடுத்து கெளரவம் சேர்க்கிறார் மோடி.
அதேசமயம் தமிழகத்தைச் சேர்ந்த கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, பாமக குறித்து ஒரு சத்தத்தையும் காணோம். இந்த இரு கட்சிகளும் தமிழகத்தில் பாஜகவுடன் இணைந்து புதிய கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தவையாகும்.
இதில் தேமுதிக மிகத் தீவிரமாக பிரசாரம் செய்தும் கூட போட்டியிட்ட 14 இடங்களில் 10ல் டெபாசிட் இழந்து 14 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.
அதேசமயம், பாமகவோ தர்மபுரி தொகுதியில் அக்கட்சித் தலைவர் ராமதாஸின் மகன் அன்புமணியை வென்றெடுத்தது.
தோற்றாலும் கூட தமிழக கூட்டணி்க் கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி தர பாஜக முடிவு செய்துள்ளது. பாமகவோ பச்சையாகவே அன்புமணிக்கு முக்கிய துறை வேண்டும் என்று பாஜகவிடம் கேட்டுள்ளது. தேமுதிகவும் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. மேலும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவியும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும் தற்போதைய முதல் கட்ட அமைச்சரவையில்இவர்களுக்கு இடம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. அதேசமயம், பொன் ராதாகிருஷ்ணனுக்கு முதல் கட்ட அமைச்சரவையில் இடம் தரப்படுவதாக சொல்கிறார்கள்.
முதலில் அமைச்சரவையை அமைத்து பதவியேற்ற பின்னர் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது தேமுதிக, பாமகவுக்கு அமைச்சர் பதவி தரப்படலாம் என்று சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications