மாணவிகளிடம் “வழிந்த” பூரிக் கட்டை வியாபாரி - கைது
திருவள்ளூர்: பள்ளி மாணவிகளை மறித்து பாலியல் தொந்தரவு அளித்த வியாபாரி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் அருகே பள்ளி மாணவிகளை வழிமறித்து சில்மிஷம் செய்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளுர் அடுத்த கும்மிடிகுப்பம் பகுதியை சேர்ந்த இரண்டு மாணவிகள் அங்குள்ள பன்னுர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த வாரம் பள்ளியில் தேர்வு முடிந்தது. இறுதித்தேர்வு முடிந்தபின் இருவரும் பள்ளியிலிருந்து கிளம்பி வழக்கம்போல் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியில் சாலையோரத்தில் பூரி கட்டை மற்றும் மரவேலைகள் கடை நடத்திவந்த வெங்கடேசன் மகன் ராஜேஷ் என்பவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதோடு அறுவறுக்கத்தக்க முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது.
இதில் ஒரு மாணவி அலறியடித்தபடி ஓடி ஊர் மக்களிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திரண்டு வந்தனர். தகவல் அறிந்து இன்னொரு மாணவியை விட்டுவிட்டு அங்கிருந்து ராஜேஷ் தலைமறைவானதாக தெரிகிறது.
இது குறித்து மப்பேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ராஜேஷை கடந்த ஒரு வாரமாக தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை ராஜேஷ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராஜேஷை நீதிமன்றத்தில் ஒப்படைக்க காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.