கனிமொழி பெயரில் சமூக வலைத்தளங்களில் விஷமம்.. போலீசில், திமுக புகார்
சென்னை: திமுக எம்.பியும், அக்கட்சி தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி பெயரில் சோஷியல் மீடியாவில் நடத்தப்படும் விஷம பிரச்சாரத்திற்கு எதிராக போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக சார்பில் செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான, செல்வநாயகம், போலீசில் இந்த புகாரை பதிவு செய்துள்ளார்.

அவர் கூறுகையில், கனிமொழி பெயரில் ப்ளூ டிக் கொண்ட சோஷியல் மீடியா அதிகாரப்பூர்வ பதிவு போல போலியாக தயாரித்த விஷமிகள், அதில் சில நச்சு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மொத்தம் 3 போஸ்ட்டுகளுக்கு எதிராக நாங்கள் போலீசில் புகார் பதிவு செய்துள்ளோம்.
அதில் ஒன்று, "எந்த ஆன்மீக தலைவரும் எனது தந்தையை பார்க்க வரக்கூடாது. அர்ஜுன் சம்பத் கொண்டுவந்த பிரசாதத்தை நான் குப்பை தொட்டியில் வீசிவிட்டேன்" என்று கனிமொழி கூறியதை போல பொய்யாக சோஷியல் மீடியாவில் உலவ விடப்பட்டது. (ஜக்கி வாசுதேவ் காவிரி மருத்துவமனை சென்று கருணாநிதி உடல் நலம் விசாரித்திருந்தார்).
மற்றொரு போஸ்ட்டில், மாதவிடாய் காலத்திலும் திருப்பதி கோயிலுக்கு பெண்கள் செல்ல வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதுவும் கனிமொழி கூறாத தகவல். மற்றொரு போஸ்ட், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றியது. அதை பற்றி சொல்லவே வாய் கூசுகிறது.
அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றோர், பிற மதத்தவர்களின் நம்பிக்கையில் தலையிட கூடாது என்ற கொள்கை கொண்டவர்கள். ஆனால் கனிமொழி மீது வேண்டுமென்றே திட்டமிட்டு சோஷியல் மீடியாவில் இப்படி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications