திருப்பூர் பாஜக நிர்வாகி மாரிமுத்து கள்ளக் காதலால் தற்கொலை! மோடி படத்துக்கு பாஜகவினரே செருப்பு மாலை!
திருப்பூர் பாஜக நிர்வாகி மாரிமுத்து கள்ளக் காதலால்தான் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் உறுதி செய்துள்ளனர். இதனை திசை திருப்ப பாஜகவினரே மோடி படத்துக்கு செருப்பு மாலை போட்டதும் அம்பலமாகியுள்ளது.
சென்னை: திருப்பூர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி மாரிமுத்துவின் மரணம் தற்கொலைதான் என போலீஸ் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கள்ளக் காதல் குட்டு அம்பலமானதால் மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டதை கொலை போல மாற்றிய பாஜகவின் செட்டப் நாடகமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். ஆனால் அவரது வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு கைகள் கட்டப்பட்டிருந்தன்.
அத்துடன் அவரது உடல் அருகே பிரதமர் மோடியின் படத்துக்கு செருப்பு மாலை போடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் 1,2,3,4,5 என எழுதப்பட்டு அதில் 3 என்பது அடிக்கப்பட்டும் இருந்தது. இதையடுத்து மாரிமுத்துவை சிலர் அடித்து கொலை செய்துவிட்டதாகவும் மேலும் பலரை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் பாஜகவின் கூறி பதற்றத்தை ஏற்படுத்தினர்.

பதற்றத்தை உருவாக்கிய பாஜக
மேலும் திருப்பூர் சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், தமிழகத்தில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதாக கண்டனம் தெரிவித்திருந்தார். இக்கொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்திருந்தது. மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாரிமுத்து குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டிருந்தனர்.

கள்ளக்காதலே காரணம்
இந்த நிலையில்தான் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் மாரிமுத்துவின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மாரிமுத்துவுக்கு அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளக் காதல் இருந்துள்ளது; இது குடும்பத்தினருக்கு தெரியவந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.

மோடி படத்துக்கு செருப்பு மாலை போட்ட பாஜக
கள்ளக் காதல் தற்கொலையை மூடி மறைக்கவே பாஜகவினரே மோடி படத்துக்கு செருப்பு மாலை போட்டதும் பதற்றத்தை உருவாக்கும் வகையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கப் போகிறது என வதந்தி பரப்பிவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பாஜகவினரின் போராட்டமும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. பொன். ராதாகிருஷ்ணனின் திருப்பூர் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எல்லாமே பஞ்சாயத்து கொலை
தமிழகத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்படும் போது பதற்றத்தை கிளப்பிவிடுகின்றனர் பாஜகவினர். ஆனால் இப்படியான பெரும்பாலான கொலைகள், கள்ளக் காதல், ரியல் எஸ்டேட் போட்டி மற்றும் முன்விரோதத்தால் மட்டுமே நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications